Tuesday, March 8, 2011

பகிரங்க எச்சரிக்கை


வலைப்பூக்களின் பின்னூட்டங்கள் வழியே அறிமுகமாகி, பின் தொடர்ந்து, இணையக் குழுக்களில் விவாதித்து, அரட்டைப் பெட்டிகளில் பேசிக் கொள்வதுதான் வலைப்பூ நட்பின் பரிமாணம். சமூக வலைத்தளங்களில் வியாபித்திருக்கும் போலித்தன்மைக்கு அஞ்சுவோர் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

இங்கு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதுடன் எழுதும் திறனை மெருகேற்றிக் கொள்ள முடிகிறது. நமக்கென 
ஒரு தளம் என்கிற உணர்வும், நம்மைப் பின்தொடரும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற பெருமிதமும்தான் வலைப் பதிவர்களை தொடர்ந்து எழுதச் செய்கின்றன.

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் சேவை வழங்குவோர் என அனைவருமே இதுபோன்ற அரட்டைப்பெட்டி வசதியை வழங்குகின்றனர். நட்பைத் தேடுவோர் முதலில் சங்கமிக்கும் இடம் சமூக வலைத்தளங்கள்தான். ஆனால் இந்த நட்பில் நம்பகத்தன்மை இருப்பதில்லை. எச்சரிக்கை உணர்வுடனேயே எல்லோரையும் அணுக வேண்டும். இவற்றில் பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளில் பெரும்பகுதி எந்த நோக்கமும் இல்லாதவை. அவற்றிலும் உண்மையானவை மிகச் சொற்பமே. பெண்களையும், குழந்தைகளையும் பிடிப்பதற்காகவே பலர் வலைவிரித்திருப்பார்கள். தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களின் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்யவும் வழியுண்டு.

சமூக வலைத்தளம் என்பது பொதுவெளி. குழு விவாதமும் அதுபோலத்தான். பொது இடத்தில் எந்த அளவுக்கு நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொள்வோமோ அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் இயங்க வேண்டும். ஆனால், இந்தத் தெளிவும் முதிர்ச்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவியும் ஆறாம் வகுப்பு மாணவனும் சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்கிறார்கள். அரசம்பட்டி அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு என்பதுபோல இவர்களுக்குள் குழுக்களும் உண்டு. குழந்தைகளின் இணைய நடவடிக்கையைக் கண்காணிப்பது குறித்து பெற்றோருக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், இந்தக் குழந்தைகள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மணமகன் அல்லது மணமகளைக் கண்காணிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. பெண்ணுக்கு நட்பு வட்டம் எப்படி இருக்கிறது, யாருடன் நெருக்கமாகப் பழகுகிறார் என்பதையெல்லாம் பிள்ளைவீட்டார் கண்காணிக்கிறார்கள். பெண்வீட்டாரும் இதைத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காணிப்பால் திருமணம் நின்றுபோன விநோதங்கள்கூட உண்டு. எல்லாம் தமிழ்நாட்டில்தான்.

சமூக வலைத்தளங்களில் எல்லோராலும் நம்மைக் கண்காணிக்க முடியும் என்பதே அவற்றைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. இதுதான் மோசடிகள் நடப்பதற்கும், அந்தரங்கங்கள் வெளியாவதற்கும் முக்கிய காரணம். இணைய அரட்டையிலும் இந்த அளவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஜிமெயில் சேவையில் நமது அரட்டைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வரும் என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இருந்தாலும், அதைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அப்படியே தடுத்தாலும் வேறு வகையில் அதை ஆவணப்படுத்த முடியும்.
 பாதுகாப்பானது, ரகசியமானது என்பது போன்ற தோற்றம் இணைய அரட்டைக்கு இருக்கிறது. உண்மையில் அது முழுக்க முழுக்க பொய்யே. என்னதான் உங்களது மின்னஞ்சல் கணக்கை நீங்கள் கடவுச் சொல் போட்டுப் பூட்டியிருந்தாலும் கள்ளச்சாவிகள் போட்டு அதைத் திறந்து பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்த திருடர்கள். உங்கள் பாதுகாப்புக்காக வீட்டுச் சுற்றுச் சுவரை 8 அடிக்கு உயர்த்தினீர்கள் என்றால், தொழில்நுட்பத் திருடர்களால் 12 அடிக்கு ஏணி தயாரிக்க முடிகிறது. இதுதான் இன்றையத் தொழில்நுட்பத்தின் உண்மையான முகம்.

 இந்தத் தொழில்நுட்பம் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம். இணையத்தில் கிடைக்கும் பிணைப்பற்ற நட்பு எந்த நேரத்திலும் துரோகம் இழைக்கலாம். பிரபலமாக வேண்டும், நட்பு வட்டத்தை விரிவாக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை எழுதுவதும், குடும்ப புகைப்படத் தொகுப்புகளை வெளியிடுவதும் ஆபத்தை விளைவிக்கும். வலைப்பூக்களில் எழுதும்போதும் இதே எச்சரிக்கை 
உணர்வு அவசியம். தற்கால தொழில்நுட்பத்தையும் இணைய நட்பையும் நம்பி அரட்டைகளில் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. நமக்கு ஆதரவான தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் நமக்கு எதிராகவும் திரும்பக்கூடும். எச்சரிக்கையாக இயங்காவிட்டால் முடங்கிப் போகவேண்டியதுதான்.
 

24 comments:

ஹுஸைனம்மா said...

மிக அவசியமான எச்சரிக்கை ஃபாத்திமா. பெரியவர்கள்கூட வரம்பில்லாமல் இத்தளங்களில் உரையாடுவது ஆச்சர்யம்+அதிர்ச்சி அளிக்கிறது.

பாத்திமா ஜொஹ்ரா said...

//மிக அவசியமான எச்சரிக்கை ஃபாத்திமா. பெரியவர்கள்கூட வரம்பில்லாமல் இத்தளங்களில் உரையாடுவது ஆச்சர்யம்+அதிர்ச்சி அளிக்கிறது//

சரியாக சொன்னீர்கள் அக்கா,ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. இதேப் போல் நானும் பலமுறை யோசித்துள்ளேன் ஃபாத்திமா. எப்படி இப்படியெல்லாம் சொந்த விஷயங்களை சர்வ சாதாரணமாக பதிவு செய்கிறார்கள் என்று. மற்றவர்களுக்கு படிப்பினைத் தரும் அனுபவங்கள் என்றால் கூட (சொந்த விஷயங்கள் என்றால்) அதையும் அளவோடு எழுதுவதே நல்லது. நல்லதொரு எச்சரிக்கை!

ஜெய்லானி said...

100 % சரியான எச்சரிக்கை இது

அளவுக்கு மிஞ்சினால்....

உண்மையான முகம் நிறைய பேருக்கு தெரிவதில்லை எனபதுதான் வேதனையான செய்தி

GEETHA ACHAL said...

மிகவும் உண்மை...சரியாக சொன்னீங்க...

நல்ல எச்சரிக்கையான பதிவு...

அன்புடன் மலிக்கா said...

எச்சரிக்கை மிகவும் அவசியம்
அழகியமுறையில் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
நானும் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதிக்கொண்டியிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவிடுவேன்..

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அவசியமான பதிவு.நிறைய விபரம் அறிந்து கொண்டேன். ரெம்பவும் உசாராக இருக்கணும்.

Unknown said...

உண்மை! முற்றிலும் உண்மை!! அழகான பதிவு. அவசியமானதும்கூட. வலைத்தளப் பின்னூட்டங்களில் வாசகப் 'பெருமக்கள்' வரம்பு மீறிச் சென்றுவிடுகின்றனர். அத்தகையவர்களுக்கு, உங்கள் பதிவு ஒரு யதார்த்தமான எச்சரிக்கை.

பாத்திமா ஜொஹ்ரா said...

என் அன்புக்குரிய சகோதரிகள்,சகோதரர்கள் அஸ்மா,ஜிலானி,கீதா ஆச்சல்,அன்புடன் மலிக்கா,ஆயிஷா அபுல்,அதிரை அஹமது ஆகிய நல உள்ளங்களுக்கு நன்றி.ஆம்,நாம் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கட்டுரை.என் தளத்திலும் நன்றியோடு மீள்பதிவு செய்துள்ளேன்,நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

போலி நட்பு பேசுபவர்களின் முக்காடுதான் இந்த சமூக பிணைப்பு வலைத்தளங்கள் !

நல்ல எச்சரிக்கைப் பதிவு, உள்ளார்ந்து உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் ஆக்கம் !

இதேபோல் அதிரைநிருபரில் இணையத்தில் வலைவீச்சுன்னு தொடர் வந்து கொண்டிருக்கிறது அதிலும் சில நிஜத்தில் கண்ட உண்மைகளும் சொல்லப்பட்டிருக்கிறது !

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி சகோ ஒருவனின் அடிமை,மற்றும் அபூ இப்ராஹீம்.உங்கள் பிளாக் பார்த்தேன்,நன்றாக உள்ளது.

Thenammai Lakshmanan said...

சரியான நேரத்தில் எழுதப்பட்ட பகிர்வு ஃபாத்திமா..

நல்ல எச்சரிக்கை அளித்துள்ளீர்கள்..

நன்றி பா..

நட்புடன் ஜமால் said...

fact

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி சகோ ஜமால்,சகோதரி தேனம்மை.மீண்டும் வாருங்கள்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ ஃபாத்திமா...

மிக மிக மிக..அவசியமிக்க ஒரு பதிவினை எழுதியதற்கு முதலில் எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையதள நட்பு...ஹ்ம்.எத்துனை எளிதில் பெண்கள் கவரப்பட்டுவிடுகிறார்கள்...உதாரணம் எனது அறைநண்பனே சாட்சி..

எந்தவித அறிமுகமும் இன்றி விடிய விடிய பேசுவார்கள்..அவர்களின் பெற்றோர் எங்குதான் தொலைந்தார்களோ என்றுதான் எண்ணத்தோன்றும்..

மிகவு வருத்தமான செய்தி என்னவென்றால்...சளைக்காமல் முஸ்லீம் பெண்களும் அதில் பங்கு கொள்வதுதான்..
அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்..

அல்லாஹ் தங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்

அன்புடன்
ரஜின்

எல் கே said...

இன்றைய சூழ்நிலையில் அவசியமான பதிவு

R.THAMU said...

அஸ்ஸலாமு அலைக்கும்.எத்தனையோ நன்பர்களிடம் குடும்ப ஆல்பங்களை இணைய தளங்களில் வெளியிட வேண்டாம் என்று அட்வைஸ் செய்த இத்தருனத்தில் உங்களின் 'பகிரங்க எச்சரிக்கை 'பகிர்வதற்கு பொருத்தமாய் இருந்தது..யாஉஹ்தி? உங்கள் வலைப்பதிவில் உள்ள சில கட்டுரைகளை என் வலைப்பதில் இணைக்க உங்களின் அனுமதி தேவை..மாஅஸ்ஸலாமா....

பாத்திமா ஜொஹ்ரா said...

சகோதரரே thamu ,நீங்கள் தாரளமாக பதிவு செய்யலாம்.

பாத்திமா ஜொஹ்ரா said...

thanks சகோ ரஜின் மற்றும் LK

Anisha Yunus said...

இந்த தளங்களால் நிறைய வாழ்க்கை வீணாகிப் போயிருக்கிறது. நல்லதொரு நேரத்தில் நல்லதொரு பதிவு. நன்றி ஃபாத்திமாக்கா :) :)

பாத்திமா ஜொஹ்ரா said...

சரியா சொன்னீங்க அன்னு அக்கா.

Aashiq Ahamed said...

சகோதரி பாத்திமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு

தெளிவாக நெத்திபொட்டில் அடித்திருக்கிண்றீர்கள். சாட்டையடி பதிவு. தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஏம்.ஷமீனா said...

Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
Dear sister Fathima J,
Jazakallah kheir for this article.
I don't know if you know, but most of young people use to chat with strangers on the net... Hope that they will change after read this, Insha'allah...



Your sister,
M.Shameena