Showing posts with label ஷார்ஜா எமிரேட்ஸ். Show all posts
Showing posts with label ஷார்ஜா எமிரேட்ஸ். Show all posts

Thursday, December 1, 2011

உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்


அண்மைக் காலம் வரை உலகின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே சுழன்று வந்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக வட்டியில்லாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பதில் இஸ்லாமிய உலகு தீவிர 
ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. 

இதன் விளைவாக இன்று (2006 வரை) உலகில் சுமார் 280 வட்டியில்லா இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகின்றது. சுமார் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவை பல்வேறு பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களில் வைப்புக்களாகவுள்ளவற்றின் பணப் பெறுமதி சுமார் 220 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஐக்கிய அரபு இராஜ்யங்களில் (U.A.E) அமைந்துள்ள துபாய் இஸ்லாமிய வங்கி, அபூதாபி இஸ்லாமிய வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் 2006ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டியுள்ள இலாபம் 33.2% வீதமாகும் என நிதி அறிக்கைகள் கூறுகின்றன.

மலேஷியா, இந்துனேஷியா, பஹ்ரைன், சவூதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், எகிப்து முதலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி பிரித்தனியா உள்ளிட்ட பல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இஸ்லாமிய வங்கிகள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல பாரம்பரிய சர்வதேச வங்கிகள் தத்தமது வங்கிகளில் வட்டியில்லாத கொடுக்கல் - வாங்கல் அலகுகளை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலும் தற்போது இஸ்லாமிய நிதித்துறை குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

ஆயினும் இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும். இந்நிலையில் இஸ்லாமிய நிதித்துறை சார்ந்த நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்க வேண்டிய பெரிய பொறுப்பை இஸ்லாமிய நிறுவனங்கள், கலாசாலைகள் நிறைவேற்ற  வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையும் ஆகும்.