Tuesday, April 27, 2010

யுனிகோட் உமர் தம்பி காக்காவுக்கு அங்கீகாரம் தருமா கலைஞர் அரசு?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
 
thanks to 
 http://peacetrain1.blogspot.com/
 

Thursday, April 22, 2010

அதோட சேர்ந்து - இதுவும் அழிந்தது


அது நடந்தது  1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.

 நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.

அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.


அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.

அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.

இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு   நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.  
************************************************

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி
அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

Monday, April 12, 2010

பண்படுத்தும் சிந்தனை

கட்டுரை போட்டு நாளாச்சி.நெறைய ப்ராஜக்ட் வேலை,பிளாக் பக்கம் திரும்பவே முடியல.சரி என்ன உருப்படியா எழுதலாம் என்று யோசிச்சாலும் ஒன்னும் ஓடல.அதுக்கு காரணமும் இருக்கு.சமீபத்துல நடந்த ஒரு விபத்து.மனச விட்டு அகலவே இல்ல.மரணம் எப்போவும்,எங்கேயும் வரும் தப்பிக்கவே முடியாது.அதுக்கு முன்னாடி நல்ல செயலகள் செய்யனும்,இல்லன்ன பெரிய பிரச்சனைதான்.

இப்போ ஒரு ஞாபகம் வருது.ஒரு பேட்டியில (முன்னாள் பெரியார்தாசன்)இப்போ பேராசிரியர் அப்துல்லா சொன்னார்,கடவுள் இல்லன்னா,பிரச்சனையே இல்ல,நெறைய பேருக்கு கடவுள் இல்லன்னு பிரச்சாரம் பண்ணியிருக்கேன்,அவங்களுக்கும் பிரச்சனையே இல்ல.ஆனா ஒருக்கால் கடவுள் என்று ஒருவன் இருந்துட்டா?அப்போ என் கதி என்னாகிறது?அந்த சிந்தனையே என்னை உழுக்கி எடுத்துவிட்டது.பிறகு எல்லா மத புத்தகங்களையும் ஆராய்ச்சி பண்ணி,எதிலேயும் முழு திருப்தி இல்லாம,குர்ஆனில் தேடினேன்.எனக்குள் இருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.இஸ்லாத்தை ஏற்றேன்."

அந்த விபத்து,
ஏழு வருடம் கழித்து லண்டனில் இருந்து வரும் தன் மருமகனை அழைத்து செல்வதற்காக குடும்பத்தோடு சென்னை ஏர்போர்ட் சென்றது ஒரு குடும்பம்,மாமனார் கனடா சிட்டிசன்,அவரும்,அவர் மனைவி,அவர் மகள்,பேரன்கள் என எல்லாருமாக சென்றார்கள்.
மருமகனை பல வருடங்கள் கழித்து சந்தித்த ஆனந்தம் அவருக்கு,உள்ளம் குதூகலம் கண்டது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு.எல்லாரும் சென்னையிலிருந்து கிளம்பினார்கள்.அதிகாலை நேரம் - அவர்களின் கார் திருத்துறைப்பூண்டி அருகே வரும்போது,டிரைவர் சிறிது கண் அசர,எதிரே நின்றிருந்த லாரியின் மேல் கார் மோத,உடனடியாகவே மருமகன்,மாமனார் இருவரும் பலியாயினர்.மற்ற அனைவருக்கும் பலத்த காயம்,இது அந்த குடும்பத்துக்கும் மட்டுமல்ல - அந்த ஊரையே கதிகலங்க வைத்துவிட்டது.

எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும்,உறுதியையும் தருவானாக்.நம்மை காப்பானாக.

எந்த ரூபத்திலும் மரணம் வருமுன்,நாம் உணர்ந்து கொள்வோம் ஏக இறைவனை-நம்பிக்கை கொள்வோம் அவனிடத்தில் என்ற செய்தியை சொல்லி,இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் மற்ற விஷயங்களுடன்.

Saturday, March 27, 2010

அண்ணல் நபிகளின் அமுத மொழிகள்: "மனைவி"

   ''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்  நூல்: முஸ்லிம் 2911

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்  (ரலீ)  நூல்: புகாரீ 5200

 ''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: திர்மதி 1082

  ''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலிநூல்: புகாரி 56

    ''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீநூல்: முஸ்லிம் 2915

 

Thursday, March 18, 2010

யாரு அந்த பத்து பேரு..............

என் அன்பு அக்கா தேனம்மை லக்ஷ்மணன் என்னையும் அழைத்திருந்தார்கள்,பத்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என்று,அவர்களின் என் மீதான நம்பிக்கைக்கும்,அன்புக்கும் முதலில் நன்றி சொல்லி.............
இதோ என்னால் முடிந்த அளவுக்கு............


1)ஏசுவின் தாய் மேரி

தந்தை இன்றி பிள்ளை பெற்றதனால்,அக்கால மக்கள் மேரி அவர்களை அவதூறு சொன்னபோது-ஏக இறைவனுக்காக அதை சகித்துக்கொண்ட மேன்மை மிகு தாய்.

இஸ்லாத்தில் ஏசுவை-ஈசா நபி(இறைவனின் தூதர்)என்றும் மேரியை மர்யம் என்றும் அழைக்கிறோம்.மேலும்,அவர்கள் மிக நல்ஒழுக்கமுள்ள சிறந்த பெண்மணி என்பதையும் ஏற்கிறோம்.

 2)கதிஜா ரலி அவர்கள்

தம் நாற்பது வயதில் தன் கணவரை (நபிகள் நாயகம் ஸல்)இறைவன் தன் தூதராக (இஸ்லாம்)தேர்வு செய்து-அகிலத்தாருக்கு குரானையும் வழங்கி,மக்களுக்கு நற்போதனை செய்யுமாறு சொன்னவுடன்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு போதனை செய்யவே,அம்மக்கள் அவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் கொடுத்தபோது,தம் கணவருடன் கூட இருந்து -எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அந்த உத்தமி.

3) இந்திரா காந்தி

துணிச்சல் மிகு பெண்(ஆண்களே கொண்டுவராத எமேஜென்சியை கொண்டுவந்தவர்)

4)மேடம் கியூரி

இயற்பியல் ஆராய்ச்சி

5)மேதா பட்கர்

சேவகி

6)கமலா சுரையா

எழுத்தாளர்

7)சரோஜினி நாயுடு

கவிக்குயில் 

8)டாகடர் முத்துலட்சுமி

பெண்கள் முன்னேற்றம்

9)பிரதீபா பாட்டில்

அரசு நிர்வாகம் 

10)லத்திகா சரண்

சட்டம் ஒழுங்கு

அக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும். 

Sunday, March 14, 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010

Sunday, February 21, 2010

எங்க ஊர்க்காரரும்,அமிகோவும்!

அன்னைக்கி ஒரு நாள்,சுமாரா ஒரு மாசம் முன்னாடி எங்க ஊருக்காரர் ஒருத்தர் சாக்ரமண்டோவிலிருந்து-ஏர்போர்டுக்கு பிளைட் பிடிச்சி (கலிபோர்னியா தலைநகர்)நியூயார்க் போறதுக்காக டாக்சி ஏற்பாடு பண்ணிஇருக்கார். (பேரு வேணாமே)வந்தது மெக்சிகோ நாட்டுக்காரன்.இவரும் டாக்ஸியில உட்காந்தாச்சி,அதும் கிளம்பி ஏர்போர்ட் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் கழிச்சி,அந்த மெக்சிகோ டாக்சிக்காரன், நம்ம ஆளை ஒரு கேஸ் ஸ்டேஷன்(பெட்ரோல் பங்க்)கூட்டிப் போய்,கேஸ் போடணும் என்று சொல்லி,அவனும் கீழ இறங்கி-கடைக்குள்ள போய் கேஸ் போட    பணம் தா என்று கேட்க,இவரும் கீழ இறங்கி அவனோட கூட போய் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'இறங்கி நடந்து வர 'அப்பொழுது அது நடந்தது,இவர் டாக்சியை விட்டு இறங்கினதும்-அந்த மெக்சிகோ டாக்சிக்காரன் விருட்டென்று  டாக்ஸியில ஏறி பறந்துவிட,நம்ம ஆளு,"அமிகோ-அமிகோ"என கத்த(ஸ்பானிஷ் மொழியில் அமிகோ என்றால் நண்பா என பொருள்)அவன் போயே,போய்விட்டான்.

பாவம் நம்ம ஆளுவுடைய,பாஸ்போர்ட்,கிரீன் கார்ட்,பணம்,பொருட்கள் எல்லாம் போய்விட்டன.என்ன செய்வது?

இது போன்ற தகிடு தத்ததங்கள்  நம்ம ஊர்லயும்    இருக்கு,அமெரிக்காவிலேயும் இருக்கு.எல்லாரும் விழிப்புடன் இருக்கவே இந்த செய்தி.


(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. 

அல்குர்ஆன் 2-186

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி




Tuesday, February 9, 2010

கிளைகளும்,கோத்திரங்களும்.........

அட நீ இந்த வூட்டு புள்ளயா? உன்னோட தடிச்ச உதட்ட வச்சே கண்டு புடிச்சிட்டேன்.சரியா?

அட நீ அந்த அவோ வூட்டுப் பையன்தானே,உன்னோட கண்ணை வச்சி தெரிஞ்சி போச்சு.

இப்பிடி சிலபேரோட முக சாடை,மூக்கு அளவு,முரசு,உதடு,முடி,தொந்தி,உயரம்-குள்ளம்,நடை,பேச்சு,கலர் இதையெல்லாம் வச்சி,ஒவ்வொரு குடும்பத்தையும் நாம அடையாளம் காண முடியும்.

இதெல்லாம்,இந்த வித்தியாசமெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இறைவன் படைத்துள்ளான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட சில குணாதியசங்கள் உண்டு.இந்த மாதிரியான சில வித்தியாசங்களை வைத்து,ஒருவர் மற்றவரை பழிக்கவோ,அல்லது இது மூலம் உயர்த்தி-தாழ்த்தி நடப்பது அறிவீனம்.

ஆனால் இப்படி மக்களில் பலர் சில குடும்பங்களில் உள்ள குணாதியசங்களை வைத்தோ,அல்லது அவர்களின் தனிப்பட்ட உடல் வாகை வைத்தோ சாடி பேசுவதைக் காண்கிறோம்.அது மிக தவறு.

உதாரணமாக,குள்ளமான ஒருவரை பார்த்து.ஜப்பான்காரன் வர்றான் பாரு என்றோ வெள்ளை நிறத்தில் ஒருவனைக் கண்டால் "வெள்ளப்பாச்ச"என்பது கருப்பாய் இருந்தால் "அடுப்புக்கரி"என்பதும் இப்படி நிறைய சொல்லலாம்.இதை நாம் உடனே கை விடவேண்டிய தீய பண்பாகும்.அல்லாஹ் இதை விரும்புவதில்லை.




இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.
இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.

மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே

படைத்தோம்.

நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக

உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே

இறைவனிடன் சிறந்தவர்.

இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.


திருக்குர்ஆன்

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

Tuesday, January 26, 2010

ரசிக்கும் உரிமை கணவனுக்கே

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.


முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

னெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது
 

Saturday, January 23, 2010

ஒட்டகத்தை கட்டு


சில பேரு இப்பிடிதாங்க,தான் எந்த முயற்சியும் பண்ணாம,இறைவன் பாத்துக்குவான் என்று சோம்பேறியாக காலம் தள்ளுவார்கள்.கேட்டா,அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்,அவன் தருவான்,நாம ஏன் கவலைப்படணும் என்று சொல்லி முடங்கிக் கிடப்பார்கள்.


அது தப்புங்க.இறைவன் மேல நாம் முதல்ல நம்பிக்கை வைக்கனும்தான்.ஆனா அதுக்காகாக வேண்டி,நான் நம்புறேன் அதுனால எந்த முயற்சியும் பண்ண மாட்டேன்னு சொலது சரி இல்லங்க.

எந்த ஒண்ணா இருந்தாலும்,நாம முயற்சி பண்ணனும்,அதோட இறைவனுடைய உதவியை நாடி,அவனிடம் துவா(பிரார்த்தனை)செய்ய வேண்டும்.

உதாரணமா,ஒரு காரியம் பண்ணவேண்டும்,இல்ல எதோ ஒரு செயல் பண்ண வேண்டும் என்றால்,அந்த காரியம் நிறைவேற,செயல் துவங்க,நாம் முயற்சி எடுத்து-அந்த காரியம் நிறைவேற உழைக்க வேண்டும்.அத்துடன் நிறுத்தாமல்,யா அல்லாஹ்,என் இறைவனே,இந்த காரியத்தில் இறங்கிவிட்டேன்,(இறங்க இருக்கிறேன்)அந்த நல்ல காரியம் நிறைவேற நீதான் உதவி செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பொறுப்பு சாட்ட வேண்டும்.

இதைத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள்,"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் துவா செய்யுங்கள்"என்று.

ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.

எனவே,சோம்பித்திரியாமல்,நன்கு முயற்சிக்க,உழைக்க வேண்டும்,அத்துடன் அல்லாஹ்விடம் அந்த முயற்சி,உழைப்பு வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.சரிதானுங்களே


இன்ஷா அல்லாஹ்,
மற்ற விஷயங்கள

பிறகு பார்ப்போம்.